Will of God
தேவனுடைய சித்தம்
தேவனுடைய சித்தம் என்றால் தேவனது விருப்பம். தேவனது அநாதி தீர்மானம் என்று அர்த்தம். வேத புத்தகம் மட்டுமே நமக்கு தேவனுடைய தயவுள்ள சித்தத்தைப் போதிக்கிறது. அவரது சித்தத்தைத் தமது கட்டளைகள், கற்பனைகள், நியாயங்கள், நீதிகள் மூலமாக தேவன் மனுக்குலத்திற்குத் தெரியப்படுத்தினார். மனிதன் தேவசித்தத்தை அறிந்து கொள்ள வேத புத்தகத்தைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் மனிதன் தன் சுயசித்தமாகிய தன் விருப்பத்தின்படியே தன் வாழ்வை நியமிக்க விரும்புகிறான். தேவசித்தத்தை அறியாதிருக்க சில காரணங்கள்:
- தேவசித்தம் என் சித்தத்திற்கு முரண்பாடாக இருந்துவிட்டால் என்ன செய்வது? எனவே எனக்கு தேவசித்தம் தெரியவேண்டாம் என்று வாதிடுவோர் பலர்.
- மேலும் சிலர் மனிதர்களாகிய நமக்கு எப்படி கடவுளின் சித்தம் தெரியும்? எனவே அதை அறிய முற்பட வேண்டாம் என்கிறார்கள்.
- வேறு பலர் நடப்பதெல்லாமே தேவசித்தம்தானே என்று எண்ணுகிறார்கள். முக்கியமாக தீமையான காரியங்கள் நடக்கும்போது, இது கடவுளின் கரம் என்கின்றனர். தேவன் தீமைக்கு காரணர் அல்லர்.
பரிசுத்த வேதாகமத்தில் யாக்கோபு எழுதின பொதுவான நிருபம் முதலாம் அதிகாரம் 13ம் வசனம் முதல் 15ம் வசனம - “சோதிக்கப்படுகிற எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல. ஒருவனையும் அவர் சோதிக்கிறவரல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்”. எனவே நம் வாழ்வில் நடப்பதெல்லாம், அதிலும் முக்கியமாக தீமையான காரியங்கள் தேவனுடைய சித்தம் அல்ல”.
தேவசித்தத்தின் வகைகள்:
- தேவசித்தம் என்பது அவரது நன்மையான சித்தம்.
- தேவசித்தம் என்பது அவருக்கு பிரியமான சித்தம்.
- தேவசித்தம் என்பது அவருடைய பரிபூரண சித்தம்.
இதை அறிய நமது மனம் மறுரூபமடைய வேண்டும் என்று ரோமர் 12:1–2 வசனங்களின் மூலம் அறிகிறோம்.
மேலும் தேவசித்தம்; permissive will, அதாவது அனுமதிக்கும் சித்தம் என்றும், perfect will, அதாவது பரிபூரண சித்தம் என்றும் இருவகைப்படும். அவரது பரிபூரண சித்தத்திற்கு நாம் ஒத்துழையாமல் விடாப்பிடியாக தேவனிடம் மன்றாடி, போராடி, அவரது அனுமதிக்கும் சித்தத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. உதாரணமாக ஆபிரகாம் ஆகார் என்னும் அடிமைப் பெண்ணின் மூலம் இஸ்மவேலைப் பெற்றெடுத்தது தேவனது பரிபூரண சித்தம் அல்ல. ஆனால் அது தேவன் அனுமதித்த சித்தம்.
அநேக உதாரணங்கள் வேதத்தில் உண்டு. யோபுவை பிசாசானவன் சோதிக்க முற்பட்டது, தேவனின் பரிபூரண சித்தம் அல்ல. அது அவரது அனுமதிக்கப்பட்ட சித்தம். அவரது பரிபூரண சித்தத்திற்குள் நாம் செல்ல வேண்டும் என்பதே தேவனது மேலான நோக்கம். பவுல் என்னும் தேவமனிதன், “உமது தயவுள்ள சித்தத்தை எனக்கு விருப்பமாக, செய்கையாக மாற்றும்” என்று nஐபிக்கிறார். பிலிப்பியர் 2:13 பரிசுத்த வேதாகமம்.
மேலும் தேவனது வெளிப்படுத்தப்பட்ட சித்தம் - revealed will என்றும் உண்டு என்று நாம் அறிய வேண்டும். அதாவது வேதாகமத்தின் மூலமாக நாம் அறியும்படிக்கு வசனங்கள் உண்டு. சில உதாரணங்கள்:
- ஒருவனாவது கெட்டுப் போவது தேவசித்தமல்ல. (மத்தேயு 18:14) பரிசுத்த வேதாகமம்.
- கடைசி நாளில் அவனை எழுப்புவதே என் பிதாவின் சித்தம் (யோவான் 6:39,40)
- ஒரே ஆவியானவர் தமது சித்தத்தின்படி பகிர்ந்து அளிக்கிறார். (1 கொரிந்தியர் 12:11)
- தேவ சித்தத்தின்படியே நமது பாவங்களுக்காக தம்மைத்தாமே ஒப்புவித்தார்! ஏன் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி என்று கலாத்தியர் 1:4 இல் வாசிக்கிறோம்.
- நாம் பரிசுத்தமள்ளவர்களாய் வாழவேண்டும் என்பது தேவசித்தம் 1 தெசலோனிக்கேயர் 4:3
- எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தேவ சித்தம். மேலும் தேவனுடைய கட்டளைகள், கற்பனைகள் யாவும் வெளிப்படுத்தப்பட்ட தேவசித்தம்.
மறைவான தேவசித்தம் : (Unrevealed will of God)
நம்முடைய எதிர்காலம் வெளியரங்கமாகத் தெரிவிக்கப்படவில்லை. அது மறைக்கப்பட்டது. ஆனால் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்குள் நாம் செயல்படும்போது, நமக்குள் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியரால் நாம் ஆளுகை செய்யப்படுகிறோம். எனவே அவர் நமக்கு உதவி செய்து நம்முடைய நினைவுகளை தேவநினைவுகளோடு ஒப்புரவாக்கி, கிறிஸ்து இயேசுவிலுள்ள சிந்தையே நம்மில் காணும்படி செய்து, நம் வாழ்வை அவரது தயவுள்ள சித்தத்திற்குள் இணைத்து விடுவார். இது ஒரு நாளில் நடப்பதல்ல. நம் வாழ்நாள் முழுவதும் தேவசெயலுக்கு விட்டுக்கொடுக்கும் யாவரின் பாக்கியம் இதுவே!
இவ்வாறு தேவ சித்தத்திற்கு தங்கள் வாழ்வை விட்டுக்கொடுத்தவர்கள் மட்டுமே வாழ்வின் இறுதியில் எந்த வித மனக் கஷ்டமும் இல்லாதவர்களாய் நல்ல போராட்டத்தைப் போராடி ஓட்டததை முடிக்க முடியும். இது இயேசு கிறிஸ்துவின் ஆவியரால் ஆளப்படும் யாவருக்கும் கிடைக்கும் வரப்பிரசாதம்.