Jesus The Lord God
JESUS – THE LORD
இயேசுவே ஆண்டவர். இயேசுவே கடவுள்.
ஆண்டவர் என்றால் ஆண்டு அரசாட்சி செய்பவர். இறையாட்சி என்றால் கடவுளது ஆட்சி என்று அர்த்தம். மன்னர்கள் ஆட்சி செய்தால் முடியாட்சி (Crown) என்று பெயர். மக்களே ஆட்சி செய்தால் குடியரசு என்று பெயர். தீமை ஆட்சி செய்தால் தீய ஆட்சி என்று பெயர். நல்லோர் ஆளுகை செய்தால் நல்லாட்சி என்று சொல்வது வழக்கம். இறைவனே ஆட்சி செய்வதென்றால் ஊரையோ, உலகத்தையோ அல்ல.
அவர் படைத்த மக்களை ஆளுகை செய்ய விரும்புகிறார். அதாவது மக்களின் வாழ்வு அவருக்கே சொந்தம். எனவே மனிதனின் ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்தும் இறைவனின் கட்டுப்பாட்டிற்கும் இருக்க வேண்டும் என்பதே இறைவனின் திட்டம். இது தேவதிட்டம். படைப்பாளருக்குத்தான் படைப்புகளின் மேல் அதிகாரம் உண்டு. ஆனால் மனிதன், தன்னைத் தானே ஆளுகை செய்ய விரும்புகிறான். அப்படி அவன் கடவுளைத் தள்ளி விட்டு தானே தன் வாழ்வின் அதிகாரி, எப்படி வேண்டுமானாலும் என் வாழ்வை நடத்துவேன் என்று தீர்மானம் செய்தாலும் கடவுள் விட்டு விடுவார். வற்புறுத்த மாட்டார்.
நான் தான் உன்னைக் கட்டுப்படுத்துவேன் என்று தடுத்தும் நிறுத்த மாட்டார். ஏனெனில் கடவுள் மனிதனுக்கு சுய உரிமை கொடுத்திருக்கிறார். தீர்மானம் செய்யும் திறனையும் கொடுத்திருக்கிறார். கடவுளால் ஆளப்படுவதை மனிதன் தெரிந்தெடுத்தால் சரியான முடிவுகளை அவன் எடுப்பான். அதன் விளைவு சந்தோஷமும், திருப்தியுமாக இருக்கும். தானே, கடவுளின்றி எடுக்கும் எந்த முடியும் மனுக்குலத்தின் சரிவுக்கும், இழப்புக்கும் காரணமாகும்.
எனவே தான் கடவுளே மனு உரு ஏற்று இயேசு என்னும் மனுவாகப் பிறந்து, வளர்ந்து, தான் வந்த நோக்கத்தைச் சொல்லும் போது தெளிவாக தன்னை ‘தேவமகன்’ என்று விளக்கினது மட்டுமல்லாமல் அவரால் ஆளப்படுவதற்கான முறைகளையும் கற்றுக் கொடுத்தார்.
- மனம் ஆண்டவரண்டை திரும்ப வேண்டும்.
- தன் பொல்லாத வழிகளை குறித்து வருத்தமடைய வேண்டும்.
- தவறுகளுக்காக கடவுளிடம் பாவ அறிக்கை செய்ய வேண்டும்.
- ஆண்டவரை தங்கள் இருதயமாகிய சிங்காசனத்தில் வைக்க வேண்டும்.
- கடவுள் மட்டுமே நம் வாழ்வை ஆதிக்கம் செய்ய விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளர வேண்டும்.
இயேசு கிறிஸ்து என்றால் இயேசுவே ஆண்டவர். அபிஷேகம் பண்ணப் பட்டவர். படைப்புகளுக்கு படைப்பாளராகிய தாமே ஆண்டவரும், போதகரும் என்று வெளிப்படுத்த வந்தவர்.
பிதாவாகிய தேவனும் அவரே! குமாரனாகிய தேவனும் அவரே! பரிசுத்த ஆவியராகிய தேவனும் அவரே. (Refer Trinity: திரித்துவம் என்னும் பிரிவை வாசிக்கவும்.)