Jesus – The Sanctifier
இயேசுவே பரிசுத்தமாக்குகிறவர்
மனிதனால் பாவமே இல்லாத பரிசுத்த வாழ்வு வாழ்வது மிகவும் கடினம். இயேசு கிறிஸ்துவும்,; தான் இந்த உலகத்தில் வாழ்ந்த போது பரிசுத்தமாக வாழ்வதின் அத்தியாவசியத்தை அதிகமாக வலியுறுத்தினார்.
பாவத்திலிருந்து மீட்கப்பட்டு விட்டோம் என்றால் பரிசுத்தமே நமது அலங்காரமாகிவிடும். ஆனால் மனித சுபாவம் பலவீனமானது. செய்யக்கூடாது என்பதை மாம்சம் செய்யத் தூண்டிவிடுகிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினால் ஆட்கொள்ளப்படுகிறவர்கள் “தேவனால் பிறந்தவர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். தாயின் வயிற்றிலிருந்து பிறத்தல் சரீர பிறப்பு. இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு அதின் தாய், தகப்பனின் சுபாவம் தான் இருக்கும். ஆனால் இயேசு கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டு, மீட்கப்பட்டு விட்ட நபர் பரிசுத்த ஆவியரால் முத்திரை போடப்பட்டு விடுகிறார். இதையே பரிசுத்த வேதாகமம் “மறுபிறப்பு” என்று அடையாளமிடுகிறவன் “கிருபைக்கு உட்பட்டவன்” என்றும் குறிப்பிடப்படுகின்றது. நியாயப்பிரமாணத்திலிருந்து (Law) விடுபட்டு, கிருபைக்கு (Grace) அடியில்; வந்து விடுகிறோம். இந்த அனுபவமே ஆதி திருச்சபையில் பரிசுத்தமாகுதலுக்கும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும் அழைக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
பரிசுத்த பவுல் அடியார் ரோமாபுரி சபையாருக்கு எழுதும் போது, “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே, சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” என்று எழுதுகிறார்.
மேலும் மாம்சத்துக்;குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல என்றும் குறிப்பிடுகிறார். ரோமர் 8:8-11 பரிசுத்த வேதாகமம்.
இந்த தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் இருப்பவன் பாவம் செய்ய முடியாது. அப்போஸ்தலன் யோவான் கூறுவதைப் பாருங்கள். “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்த படியினால் பாவம் செய்ய மாட்டான். இதினால் தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்” என்றும் கூறுகிறார். (1 யோவான் 5:9,10 பரிசுத்த வேதாகமம்).
இதிலிருந்து நாம் அறிவது என்ன? நமது சரீரம் தேவனது ஆலயம். பரிசுத்த ஆவியபனவர் இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறவனிடம் வந்து வாசம் பண்ணுவதால் அவன் ;பரிசுத்தவான்’ என்று வாழ அழைக்கப்படுகிறான். இயேசு கிறிஸ்து பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார். அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக என்று பரிசுத்த வேதாகமம் எச்சரிக்கிறது. இதை ரோமர் 6:10–14 வசனங்களில் (பரிசுத்த வேதாகமம்) வாசிக்கிறோம்.
மேலும் இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில் எந்த ஆசாரியனும் நாள்தோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவர்த்தி செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம்; செலுத்துகிறவனாயிருப்பான். ஆனால் ஆண்டவராகிய இயெசு கிறிஸ்துவோ வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு கையினால் பலி செலுத்துகிற வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார். நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் நமது மனசாட்சியை செத்த கிரியைகளற சுத்திகரிப்பது அதிக நிச்சயம். எனவே இயேசு கிறிஸ்துவின் இரத்தம், விசுவாசிக்கிற நம்முடைய சகல பாவங்களை நீக்கி, நம்மை சுத்தம் செய்கிறது. இதுவே பரிசுத்த வாழ்வின் அடிப்படை.
இந்த பரிசுத்தமாக்குதலினாலே நம்முடைய கடந்த கால பாவங்களும், நிகழ்கால பாவங்கள் இன்னும் செய்யப் போகும் பாவங்களும் கூட கழுவப்பட்டு விடுகின்றன. எனவே கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொரு பரிசுத்தவானும் நீதிமானாக்கப்படுகிறான். எப்படிப்பட்ட பயங்கரமான பாவம் செய்தவனும் தான் செய்த பாவங்களுக்காக இருதயத்தில் குத்தப்பட்டு, மனந்திரும்பி, பாவங்களை அறிக்கையிட்டால், அவன் முற்றிலும் நீதிமான் ஆக்கப்படுகிறான். கொரிந்து என்னும் பட்டணத்தில் முதல் நூற்றாண்டில் காணப்பட்ட பாவங்களின் பட்டியல் இதோ,
- விக்கிரகாராதனைக்காரர்
- விபச்சாரக்காரர்
- சுயபுணர்ச்சிக்காரர்
- ஆண்புணர்ச்சிக்காரர்
- திருடர்
- பொருளாசைக்காரர்
- வெறியர்
- உதாசீனர்
- கொள்ளைக்காரர் (1 கொரிந்தியர் 6: 9-10 - பரிசுத்த வேதாகமம்)
ஆனால் இவர்களின் பரிசுத்தமாகுதலைக் குறித்த சாட்சி இதோ: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.;”. (1 கொரி 6:11 – பரிசுத்த வேதாகமம்) இதுவே இயேசுவின் இரத்தத்தின் வல்லமை! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செயல்படும் வேறு சில விதங்கள்.
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் (Mediator of the new covenant)
பிரதான ஆசாரியர் (Chief Priest)
தேவ ஆட்டுக்குட்டி (Lamb of God)
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் - இயேசு
உடன்படிக்கை இரண்டு வகைப்படும:
பழைய உடன்படிக்கை
புது உடன்படிக்கை
பழைய உடன்படிக்கையில் ஆசாரியன் அனுதினமும் பலி செலுத்துவான்.
காளை, வெள்ளாட்டுக்கடா ஆகியவற்றின் இரத்தமே பாவ பரிகாரமாக செலுத்தப்படும்.
பழையதை நிறைவேற்றி புதிய உடன்படிக்கையை சிலுவையில் இயேசு கிறிஸ்து நிiவேற்றி இன்று அவரை நம்புகிறவர்களுக்கும், கடவுளுக்கும் நடுவாக நின்று மத்தியஸ்தம் பண்ணுகிறார் என்பதுவே உண்மை.
பாவபரிகாரம் செலுத்தப்படுவதற்கு முன்; நமக்கும், கடவுளுக்கும் நடுவில் நின்றது நமது பாவம். இது பழைய உடன்படிக்கையின் காலம்.
இப்பொழுது புதிய உடன்படிக்கையின் கீழ் நமக்கும் கடவுளுக்கும் நடுவில் நிற்பவர் நமது பாவபரிகாரியான இயேசு கிறிஸ்து. மத்தியில் நின்று மத்தியஸ்தம் பண்ணும் உரிமை அவருக்கு மட்டுமே.
இந்த கடவுளாகிய இயேசு கிறிஸ்து ஒருவரே நமக்காக மத்தியஸ்தம் செய்து நம்மை நிரபரராக்கி விடுபவர்.
பிரதான ஆசாரியர் (இயேசு) : CHIEF PRIEST (JESUS)
எல்லா ஆசாரியர்களும் பலி செலுத்தும் மிருகத்தின் இரத்தத்துடன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வார்கள். ஆனால் இவரோ தம்முடைய சொந்த இரத்தத்துடன் வானத்தின் வழியாக பரலோகம் சென்று, நம் பாவங்கள் அனைத்தையும் அவரது பரிசுத்த இரத்தத்தினால் பரிகாரம் செய்து விட்டார். இப்போதும் பிதாவின் வலது பக்கத்தில் உட்கார்ந்து, நமக்காகப் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். ஆனால் யாருக்காக என்பதை நாம் அறிய வேண்டும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு மட்டுமே அவர் பலவிதங்களில் உதவி செய்கிறார். அவர் நம்முடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கிற பிரதான ஆசாரியர் – எபிரேயர் 4:15 (பரிசுத்த வேதாகமம்)
அவர் வானங்களின் வழியாக பரலோகத்திற்குப் போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர். (எபிரேயர் 4:15) சிலுவையிலிருந்தே தமது சொந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு பிதாவின் சந்நிதியில் பிரவேசித்தார் என்பதை எபிரேயர் 9ம் அதிகாரம் 22ம் வசனம் முதல் வாசிக்கிறோம். கவனியுங்கள்:
நியாயப் பிரமாணத்தின் படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை.
ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்கு சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியிருந்தது. பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டும்.
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமாயிருக்கிற கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல் பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
நம்முடைய பாவங்களையும், அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதாகச் சொல்லுகிறார்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதால் இனி செலுத்த வேண்டிய பலி இல்லை.
இந்த ஒரே பலியான இயேசு கிறிஸ்துவால் பரிசுத்தமாக்கப்பட்டு விட்டோம்.
தேவ ஆட்டுக்குட்டி (Lamb of God)
முதலாம் உடன்படிக்கையின் காலத்தில் காளை, வெள்ளாட்டுக்கடா இவற்றின் இரத்தமே பாவ பரிகாரத்திற்காக செலுத்தப்பட்டது. ஆனால் இரண்டாம் உடன்படிக்கையாக இயேசு கிறிஸ்துவே பலியின் இடத்தை எடுத்தபடியினால் அவரை வேதாகமம் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று குறிப்பிடுகிறது. அவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தின யோவான் ஸ்நானகன் அவருக்கு திருமுழுக்கு கொடுத்தவுடன், பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் இறங்குகிறதைக் கண்டான். உடனே கூவி விட்டான், “இதோ! நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவில் இருக்கிறார். அவர் தான் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று. இதை யோவான் எழுதின நற்செய்தி நூல் முதலாம் அதிகாரம் 33ம் வசனம் முதல் 36ம் வசனம் வரை பரிசுத்த வேதாகமத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உலகத்தை அன்பு கூர்ந்த தேவன் உலகத்தில் உள்ள அனைவரின் பாவபரிகாரமாக அனுப்பின தேவ ஆட்டுக்குட்டியே இயேசு கிறிஸ்துவானவர். அவரது அன்பு உயிரையே நமக்காக கொடுக்கிற அன்பு. இந்த அன்பை ஏற்றுக்கொண்டு இந்த இரத்தமாகிய கிரயத்தால் மீட்கப்பட்டு தேவபிரசன்னத்தில் குற்றமில்லாமல் நிற்க முடியும் என்பதே உண்மை. பேதுரு அப்போஸ்தலன் கூறுவதை கவனியுங்கள். “உங்கள் முன்னோர்களின் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்து வந்த வீணான நடத்தையினின்றி அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத, மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் தமது மூலமாய், தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசி காலத்தில் வெளிப்பட்டார்” 1 பேதுரு 1:18-20 பரிசுத்த வேதாகமம். இயேசு கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாக வெளிப்பட்ட காலமே கடைசி காலத்தின் ஆரம்பமாகும்.